Saturday, February 28, 2009

"மனிதநேயம்" - கவிதைகள்: தே.ரம்யா

சாலையில் எதிரே ஒருவன்
இரத்தவெள்ளத்தில் துடிக்கும்போது
கண்களை மூடிக்கொண்டு
சுயநலமாய்ப் பயணம் தொடரும்
மனிதர்களிடையே
மரித்துப்போனது
'மனிதநேயம்'!.

---------------------------
போதை வஸ்துவை
உடலில் புகுத்தி
பெண்களின் கற்பை
கரன்ஸியில் பறிக்கும்
கயவர்களிடம்
கசங்கியே காயப்பட்டுக்
காணாமற்போனது
"மனிதநேயம்'!

---------------------------
தன் இனத்தைத்
தானே அழிக்கும் அவலம்,
நேயம் மறந்த நரகர்களால்,
வெடித்த தீவிரவாதத்தால்
சிதறியேபோனது
"மனிதநேயம்"!

---------------------------------
தின்று துப்பிய கரும்புகூட
எறும்புக்கு சிறு பசியாற்றும்
மாளிகையில் வாழ்ந்தாலும்
மனிதநேயம் மறந்த
மனிதர்களால்
சிறு எறும்பும்
வேதனைப்படும்.

-----------------------------
சிறுகச் சிறுக அரித்துப்போகிறது
சுயநல செல்கள்
மனிதனுள் வளர்ந்த
மனிதநேயம்
முழுவதும் அரித்துவிட்டால்
நாளை மிஞ்சுவது
வெற்றுடல் மட்டுமே!

-----------------------------

- தே. ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு.

Friday, February 13, 2009

'துப்பட்டா'வின் துயரகீதம்!

சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா,
தன் சோகத்தை
வெளிப்படுத்துவதுபோல்
அமைந்த 'ஒப்பாரி' பாடல்.
----------------------------------------

துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுதுங்க........


மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......


கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......


மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....


கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுதுங்க.. எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுத்தா என்னாவும்?


கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலயறீக....-அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!


உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?


பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லேயம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்.....!


தாவணிய மறந்தீக
நம்ம தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!


முந்தானையும் தாவணியும்
முழுசா மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகளத்தான்
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!


பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்புக்கு நானிருக்கேன் - அத
எண்ணாம திரியுறீக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்...


கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!


===========================
- கிரிஜா மணாளன்

(Google "அன்புடன் குழும"த்தில் வெளியான
என் படைப்பு)

www.groups.google.com/group/anbudan

Wednesday, February 4, 2009

கவிஞர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

வணக்கம்.

எனது அலைபேசி 99940966667 தற்போது செயல்படாமலிருப்பதால், புதிய அலைபேசியின் எண்ணை இவ்வார இறுதிக்குள் அறிவிக்கிறேன். அதுவரை, இத்தளத்துக்குத் தங்கள் படைப்புகளை அனுப்பும் அன்பர்கள் அஞ்சலட்டையில் எழுதி, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

கிரிஜா மணாளன்
3, பாண்டியன் சாலை, ஆனந்தநகர்,
திருச்சி 620021.

உங்கள் ஆர்வத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி!

அன்புடன்....

- கிரிஜா மணாளன்

Tuesday, February 3, 2009

துளிப்பாக்கள்.

கண்ணீர்!
========

இதயத்திலிருந்து வழிந்தாலும்
நடிப்பென்றே ரசிக்கப்படும்
நடிகையின் கண்ணீர்.

------------------------
தளிர்கள்!
========

நேற்று வெட்டிய கிளைகளில்
இன்று மீண்டும்
புதிய தளிர்கள்!

- வடுவூர். சிவ. முரளி (9842846859)
புலிவலம். திருச்சி மாவட்டம்
தமிழ்நாடு