Wednesday, August 26, 2009

திருச்சி மாநகரில்....."குறுஞ்செய்தி" இதழாசிரியர்கள்/கவிஞர்கள் சந்திப்பு (SMS journals Editors & poets Meet - 2009 at Tiruchi)




ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!
===============================
“குறுஞ்செய்தி இதழாளர்கள் (SMS இதழாசிரியர்கள்) மற்றும் படைப்பாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி” வருகிற 13.09.2009 ஞாயிறுஅன்று, திருச்சி மாநகரத்தில் நிகழவிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள “குறுஞ்செய்தி இதழாளர்கள்/ படைப்பாளர்கள்” (SMS journal editors & poets) அனைவரும் இதில் கலந்துகொண்டு, ஏனைய படைப்பாளர்கள்/இதழாளர்களைச் சந்தித்து மகிழவும், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஓர் அரிய வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறோம்.

நிகழ்ச்சி: 13.09.2009 (ஞாயிறு) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை.

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: காஜாமியான் மேனிலைப் பள்ளி, (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிர்புறம்) மன்னார்புரம், திருச்சி 620020.

ஹைக்கூ தொகுப்பு வெளியீடு: நமது கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுப்பு அன்றைய சந்திப்பின்போது வெளியிடப்படவிருக்கிறது. குறுஞ்செய்தி இதழாசிரியர்களும், அவ்விதழ்களைச் சார்ந்த கவிஞர்களும் தங்களது படைப்புகளை SMS மூலம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

மற்றும் விவரங்கள் விரைவில் இணையதளத்திலும், அலைபேசி குறுந்தகவல் வாயிலா கவும் அனைவருக்கும் அறிவிக்கப்படும்.

அழைப்பிதழ் பெறும் நண்பர்கள் அனைவரும் தங்கள் வருகையைப் பதிவுசெய்து எங்களது ஏற்பாடுகளுக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


ஒருங்கிணப்பாளர்கள் :

கிரிஜா மணாளன்
அலைபேசி: 9952422383)

அ. கௌதமன்
அலைபேசி: 9994368626)

(திருச்சி மாவட்டக் கிளை / உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)

Monday, August 24, 2009

நமது கவிஞருக்கு "தமிழ்மாமணி" விருது!



வாழ்த்துவோம்!
=============

நமது ‘உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் - திருச்சி மாவட்டக்கிளை’யைச் சேர்ந்த
அன்பிற்குரிய, கவிஞர் திரு கொட்டப்பட்டு ப. சக்திவேலன் அவர்களுக்கு
தஞ்சாவூர் “தமிழ்த்தாய் அறக்கட்டளை” அமைப்பு, “தமிழ்மாமணி” என்னும் விருதினை அளித்துக் கௌரவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் திருச்சி தமிழ்ச்சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் கவிஞருக்கு இந்த விருதினை வழங்கி வாழ்த்தினார்.

நமது அமைப்பிலுள்ள அனைத்து உறுப்பினர்கள் சார்பாக அவருக்கு நமது நல்வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது தொடர்புக்கு, அலைபேசி எண்: 9443638947


- கிரிஜா மணாளன்
செயலாளர் / திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620 021, (தமிழ்நாடு)

Sunday, August 23, 2009

சுமை!


சுமை!
======

ஒற்றை விரலில் மலை சுமந்த
கண்ணனும் பின்வாங்குவான்,
புத்தகப் பொதி சுமக்கும்
எங்கள் பிள்ளைகளின்
முகச்சுழிப்பு கண்டு.


- ப. தியாகு (9659906769)
கோவை, தமிழ்நாடு.
Email: pa.thiyagu@yahoo.in

Wednesday, August 12, 2009

சுமை!
=====

கங்காருவைப்போல் நான்
தூக்கிச் சுமந்த துக்கங்கள்
தாமாகவே விடைபெற்றுக்கொள்கின்றன
உன் மடியில் என்னை நீ
ஏந்திக்கொள்ளும்போது.

- ப. தியாகு (9659986769)
கோவை, தமிழ்நாடு.

---------------------------------------
தவம்
====

ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்கு
நதிக்கரையில்
நீருக்காக.

- ஆர். நாகராஜ் (9965015776)
மதுரை. தமிழ்நாடு.

-------------------------------------



உயிர்!
=====
ஒவ்வொரு உயிரற்ற
பொம்மைகளிடமும் இருக்கிறது
குழந்தைகளின் உயிர்.

- வெ.ராம்குமார் (9865244918)
வேலூர், தமிழ்நாடு.
------------------------------------

சர்வதேச இளைஞர்தினக் கவிதை
===============================

முடிந்தால் முடியும்!
===================
இளைஞனே!
உன்னால் முடியும்,
எதையும் வெல்வதற்கு!
சகோதரனே!
உன்னால் முடியும்,
எதையும் சந்திப்பதற்கு!
உன் கையில் உளி எடுத்து
கருத்தோடு நீ
கல்லை உடைத்தால்,
கல்லும் கலைச்சிற்பமாய் உருவெடுக்கும்!
உருக்கொடுக்கும் உன்
சாதனைக்குக் கைகொடுக்கும்!

- கவிதாயினி தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.
======================================

Monday, July 27, 2009

"கவிதைநூல் வெளியீட்டு விழா"

அன்புடையீர், வணக்கம்.

கவிஞர்கள் செல்வராஜா, திருமயம் பெ. பாண்டியன், வேலூர் வெ. ராம்குமார், வைகை ஆறுமுகம் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய....

"கொஞ்சம் கவிதைகளும், மிச்சமிருக்கும் வார்த்தைகளும்"

கவிதைநூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: 02.08.2009 ஞாயிறு
இடம்: சேலம், தி லிட்டரரி சொசைட்டி (பேலஸ் திரையரங்கம் அருகில்)
நேரம்: காலை 10.00 to 12.00.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

- அ, கார்த்திகேயன் அமைப்பாளர், "இனிது இலக்கிய வட்டம்"
சேலம்.

Saturday, July 25, 2009

கவிதைக்காக.......

கற்களை இட்டு நீர் உயர்த்திய
காக்கையின் அறிவோடு,
சொற்களை இடுகிறேன்
ஒரு கவிதைக்காக.
சமயங்களில்,
விரிசல் விழுந்த பாத்திரமாய்
மனம்.

- ப. தியாகு (9843187331)
கோவை. தமிழ்நாடு.

Wednesday, July 22, 2009

வரம்!



மரங்களின் ஒற்றைக்கால் தவத்தில்
வரமாய்க் கிடைத்தது
மனிதருக்கு நிழல்.


- பா. தியாகு (9659906769)

(நன்றி: RAGA SMS இதழ்/23.07.09)

பலி!



யாருக்கோ தோஷம்,
உயிர் இழந்தது
வாழைக் கன்று!


- செல்வி. தே.ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

Monday, July 20, 2009

பார்வையற்று......!


கருவறையில் இருந்தவரையில்
கண்டதில்லை வெளிச்சத்தை நான்,
பிறந்த பிறகும் வாழ்கிறேன்....
குருட்டுப் பெண்ணாக.


- ஜெயந்தி குமாரி
ஒக்கனூர், தமிழ்நாடு.

குங்குமம்!


நாற்புறமும் மஞ்சள் தடவி
ஊர் ஊராய்ப் பயணிக்கிறது
என் ஜாதகம்,
என் நெற்றி வகிட்டில்
குங்குமத்திற்காக!


- பிரேமா (9994449449)


(நன்றி: "விகடகவி" இதழ்
"பரவசம்" SMS.

Monday, July 13, 2009

SMS இதழ்களின் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்11


வணக்கம்.

நாள்தோறும் பற்பல கவிஞர்களின் படைப்புகளை அலைபேசி குறுந்தகவல் வாயிலாக நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கு வழங்கும் உங்கள் கலைப் பணியைப் பாராட்டுகிறேன்.
உங்கள் அனைவரைப் பற்றிய முழு விவரங்களை இத்தளத்தில் பிரசுரித்து, வாசகர்களையும் மகிழ்விக்க விரும்புவதால், உங்களைப் பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இவை கீழ்க்காணும் எனது புதிய தளத்தில் பிரசுரிக்கப்படும்.

www.smspoets-tamil.blogspot.com


- கிரிஜா மணாளன்

Saturday, July 11, 2009

கவிதாயினி சி. கலைவாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


இன்று (11.07.2009) பிறந்தநாள் காணும் சகோதரி சி. கலைவாணிக்கு எங்கள் "அன்புடன் குழுமம்" நண்பர்கள்/கவிதை வலைத்தளங்கள்/அலைபேசி கவிஞர்கள் அனைவரின் சார்பில் நல்வாழ்த்துக்கள்!

- கிரிஜா மணாளன்

Tuesday, July 7, 2009

உனது கொலுசு!


போட்டியென்று இனி யாருமில்லையென
உற்சாகத்தில் திளைத்தன,
என்னவளின் கொலுசு
தொலைந்துபோனதை
எப்படியோ தெரிந்துகொண்ட
குயில்கள்!

- ஜே திவாகர் (9789630584)
பொன்னூர், தமிழ்நாடு.

(நன்றி: RAGA SMS)

Sunday, July 5, 2009

செல்வி கலைவாணிக்கு SMS கவிஞர்களின் பாராட்டுக்கள்!

வணக்கம்.
"சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ள செல்வி சி. கலைவாணியைப் பாராட்டி எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்க" உறுப்பினர்களும், நாள்தோறும் அலைபேசி வழியாக எனக்குக் கவிதைகளை அனுப்பிவரும் இளங்கவிஞர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் எனது நன்றி.



- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.

Tuesday, June 30, 2009

"சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ள செல்வி சி. கலைவாணி



இவர் நமது கவிதைத் தளத்திலும், பிற தளங்களிலும் தொடர்ச்சியாக தனது கவிதைகளை வழங்கி, வாசகர்களை மகிழ்வித்துவரும் செல்வி சி. கலைவாணி (அரியூர், வேலூர் மாவட்டம்)
பள்ளியிலும். கல்லூரியிலும் ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ள இவர், இப்போது "மதுரை பாரதி யுவ கேந்திரா" அமைப்பு வாயிலாகவும் "சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்வி சி. கலைவாணிக்கு என் சார்பிலும், எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை சார்பிலும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620 021.

யுவஸ்ரீ கலாபாரதி விருது.


இசை, பரதநாட்டியம், விளையாட்டு, ஓவியம், யோகா, UC MAS, ABACUS மற்றும் பிற துறைகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் மதுரை, பாரதி யுவகேந்திரா அமைப்பு வழங்கிவரும் "யுவஸ்ரீ கலாபாரதி" விருது பற்றிய அறிவிப்பு இது.

- கிரிஜா மணாளன்

Friday, June 26, 2009

தோழன்!



அடம்பிடித்து அழுகிறது மனம்
அமைவது கடினமென்றாலும்,
துயரம் வரும் தருணங்களிலும்
துன்பம் தொடரும் வேளைகளிலும்
தோள் சாய்த்து ஆறுதல்பெற
தோழனொருவன் வேண்டுமென்று!

- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

மணம்!


மணம்!
---------
மண்ணில் மணம் வீசும்
மலர்களைவிட
என்னுள் மலர்ந்த உன்
இடைவிடாத காதல் மணம்
அண்டவெளியிலும்கூட
ஆக்ரமித்து வீசுகிறது!


- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

Thursday, June 25, 2009

கனவுக் கோட்டை!




புதுப்பிக்க முயன்று தோற்றுப்போகிறேன்
உன்னால் இடித்துத் தள்ளப்பட்டு
விழுந்துகிடக்கும்
என் கனவுக் கோட்டையை.


- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்,
தமிழ்நாடு.

சிதறல்!

விபத்தில் சிக்கி
சுயநினைவிழந்து
இடமாற்றமாகிவிட்டது
இரு இதயங்கள்.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட
கண்களின் கவனச் சிதறலால்!

- தே. ரம்யா,
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

மௌனம்.









ஆயுதங்களோடுதான் நிற்கிறேன்
இருந்தும் துளைத்துவிடுகிறது என்னை
உன் மௌனம்.

- கவிஞர் அமீர்ஜான் (9840954846)

Saturday, June 13, 2009

என்று தணியுமிந்த ஏக்கப் பெருமூச்சு?


வாழ்வாதாரமே
கேள்விக்குறியாய்
வளமான எதிர்காலமே
கானல்நீராய்
கனன்ற இதயத்துடனும்
குருதி சிந்தும்
கண்களுடனும்
புண்பட்ட ஈழத்தமிழரின்
புலம்பலும் பெருமூச்சும்
என்றுதான் தணியும்?

அடித்து நொறுக்கப்பட்டது
அகிம்சையைப் போதித்த
புத்தபிரான் திருக்கோயில்!
ஆதரவைத் தேடி ஈழத்து வீதிகளில்
அம்மகானே அலையும் நிலை!

சத்தியம் ஈழத்தில்
சாகடிக்கப்பட்டதால்
புத்தநெறிகளே அங்கே
புண்பட்டுப் போனது!

துடிதுடித்துச் சாவோரின்
துயரப் புலம்பலோடு
குடிதண்ணீர் குழாய்கள்கூட
குருதியாய் வடிக்கிறது!

வெறியாட்டம் ஆடுகின்ற
வேங்கைகளாய் சிங்களர்கள்
தறிகெட்டு அலைந்தபடி
தமிழ் இரத்தம் பருகுகின்றார்!

இறந்து கிடக்கும் ஈழத்தாய்களின்
இரத்தம் வடியும் மார்புகளில்
குழந்தைகள் வாய்வைத்து
குருதியைத்தான் பருகும் நிலை!

எங்கெங்கும் மரண ஓலம்
எதிரொலிக்கும் மயானபூமியில்
தங்கிடுமோ ஓருயிரேனும்
தமிழீழம் மலரும் நாளில்?


- கலைத்தாமரை ராஜேஸ்வரி
மதுரை-20.

Tuesday, May 26, 2009

கவிஞர் அருணாசலசிவாவின் "பொன் விசிறி" ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா.



அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

- கிரிஜா மணாளன்

Sunday, April 26, 2009

கவிஞர் ஏகலைவனின் சீரிய முயற்சி!

தமிழிலக்கிய உலகில், உடற்குறையுற்ற படைப்பாளிகள் மற்றும் கவிதை ஆர்வலர்கள் ஆங்காங்கே விரவியிருப்பதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். படைப்புத்திறன் கொண்ட இத்தகைய திறமையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு கூட்டுக் கவிதைத் தொகுப்பை வெளியிடவேண்டும் என்பது
என் எதிர்கால விருப்பம். பல புதிய கவிஞர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவிருக்கும் அம்முயற்சி ஈடேறும் நாளை எண்ணியபடி என் எழுத்துப் பயணத்தைத் தொடர்கிறேன்.

அன்புடன்,

கவிஞர் ஏகலைவன். (9944391668)
சேலம், தமிழ்நாடு

Saturday, April 25, 2009

பூவும் பொட்டும்!

இறந்த கணவனின்
படத்துக்குப் போனது
அவளது பூவும், பொட்டும்.

- எஸ். ராஜ்குமார் (9944848801)
கருமண்டபம், திருச்சி,
தமிழ்நாடு.

பிரமிடுகள்









ரசிக்கமுடியவில்லை
அடிமைகளின் உழைப்பை,
பிரமிடுகள்.

- வி.ம. செல்வகுமார் (9942198018)
செய்யாறு. தமிழ்நாடு.

மரம்!










உழைப்பென்னும் விதையூன்றி
விடாமுயற்சியெனும் நீரூற்றி
தன்னம்பிக்கையெனும் உரமிட்டு
தளிர்விட்டு வளரும்
வளமான வாழ்க்கையெனும்
மரம்...நமக்கு வரமாக!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு.

மழலைச் சிரிப்பு!









ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறேன்
ஏதாவதொரு குழந்தையின்
அழகானச் சிரிப்பில்!

- பாலா (9944346601)
ஈரோடு, தமிழ்நாடு.

ஜோசியக் கிளி!









யாரிடம் கேட்கும்
தன் எதிர்காலம் பற்றி,
ஜன்னல் வைத்த சிறையில் சிக்கி
சீட்டெடுத்துப் போடும் அந்த
ஜோசியக் கிளி?


- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

Friday, March 27, 2009

கோபங்கள்!





கிள்ளிக் கிள்ளி எறிகிறேன்
கொழுந்துகளை
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றன விரைவில்.
வேரறுக்கவும் முடியவில்லை
வெட்டியெறியவும் முடியவில்லை...
உரமாக என்னை
சிறுகச் சிறுக விழுங்குகின்றன
என் கோபங்கள்!

- தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.

Thursday, March 26, 2009

நாட்காட்டி!









தினமும் மகிழ்ச்சியாக
நாட்காட்டியின்
தாளைக் கிழிக்கிறேன்..
நமக்கும் பூமிக்குமுள்ள
தொடர்பு
குறைவது அறியாமல்.


- பரவை பாரதி
பரவைக்கோட்டை
தமிழ்நாடு

Tuesday, March 24, 2009


மனிதனே! மனிதநேயம் காக்க
உனக்கேன் தயக்கம்?
மறந்து, மறைந்துபோகும்
மனிதநேயம் மலர,
உனக்குள் வளரட்டும்
நல்வழக்கம்!
போதைப் பொருளில்
உனக்கேன் மயக்கம்?
நீ விழித்தெழுந்து
தயக்கத்தை தகர்த்தெறி!
உன்னைக் கண்டு விழித்தெழும்
இந்த பூமி!


- தே. ரம்யா, கொட்டக்குளம்,
(திருவண்ணாமலை)தமிழ்நாடு.

Monday, March 23, 2009

அசோகமரம்!


வீரனைப் புதைத்த இடம்
விறைப்பாய் வளர்ந்தது
அசோக மரம்!


- கே.ஏ. ராமலிங்கம் (9940771501)
சிறுவந்தட்டு (விழுப்புரம்), தமிழ்நாடு.

Sunday, March 22, 2009

தீக்குச்சி!



எரிக்கப்படுவோம் என்றாலும்
விரைப்பாக முன்நிற்கும்
தீக்குச்சி!


- ராமலிங்கம் (9940771501)

"உலக வானிலை தின"க் கவிதை.

வெப்பமாகும் பூமி
வேறுபடும் பருவநிலை
வேதனையில் மக்கள் நிலை!


-
கவிஞர் அ. கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.

கருமேகம்!


யார் திட்டியது?
கருத்துக் கிடக்கிறது
மேகத்தின் முகம்!

- சி. கலைவாணி, அரியூர்.
(வேலூர் மாவடடம்) தமிழ்நாடு.

Friday, March 13, 2009

இறைவனின் வேடம்!


வரம் கேட்கும் நோக்கில்
ஆலயம் சென்றேன்..
என்னைக் கர்ணன் ஆக்கக்
காத்திருந்தார் வாயிலில் கடவுள்,
வேடம் தரித்து.


- கவிஞர் யாழி, (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Friday, March 6, 2009

ஆறாம் அறிவு?

ஐந்தறிவை மிஞ்சியது
ஆறறிவு,
பறவை விதைத்த மரத்தை
பகுத்தறிவற்று வெட்டினான்..
ஆறாம் அறிவை
அடகுவைத்து!

- தே.ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு

"கவிஞர் கோவை யாழி"யின் கவிதைகள்

சமூகம் என்மீது உடுத்திய
ஆடைகளைக் கிழித்திட்டு
அம்மணமாகிறேன் நான்,
அழகாய் அன்பொழுகச் சிரிக்கும்
குழந்தையென
என் ஆன்மா.

----------------------------
புரிதலற்றவர்களால்
பரிகசிக்கப்படலாம்
வார்த்தைகளைப் புதைத்து
உணர்வுகளைப் பிரசவிக்கும்
நம் அன்பு.

-----------------------------
பாதுகாப்புக்கென வெட்டப்பட்ட
பதுங்கு குழிகள்..
பாரதம் கைவிட்டதால்
புதைகுழிகளாயின!

-----------------------------
காயம்பட்ட மூங்கிலில் நுழைந்து
வெளியேறுகிறது காற்று,
வாழ்வியல் சூத்திரங்களை
வாசித்துக் காட்டியபடி.

------------------------------

- கவிஞர் கோவை யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Monday, March 2, 2009

நானும்கூட...!


'நானும் ஒரு இயேசுதான்!'
பெருமைப்பட்டது
'பீனிக்ஸ் பறவை".


- 'கலைத்தாமரை' (ராஜேஸ்வரி)
மதுரை 625 020

Saturday, February 28, 2009

"மனிதநேயம்" - கவிதைகள்: தே.ரம்யா

சாலையில் எதிரே ஒருவன்
இரத்தவெள்ளத்தில் துடிக்கும்போது
கண்களை மூடிக்கொண்டு
சுயநலமாய்ப் பயணம் தொடரும்
மனிதர்களிடையே
மரித்துப்போனது
'மனிதநேயம்'!.

---------------------------
போதை வஸ்துவை
உடலில் புகுத்தி
பெண்களின் கற்பை
கரன்ஸியில் பறிக்கும்
கயவர்களிடம்
கசங்கியே காயப்பட்டுக்
காணாமற்போனது
"மனிதநேயம்'!

---------------------------
தன் இனத்தைத்
தானே அழிக்கும் அவலம்,
நேயம் மறந்த நரகர்களால்,
வெடித்த தீவிரவாதத்தால்
சிதறியேபோனது
"மனிதநேயம்"!

---------------------------------
தின்று துப்பிய கரும்புகூட
எறும்புக்கு சிறு பசியாற்றும்
மாளிகையில் வாழ்ந்தாலும்
மனிதநேயம் மறந்த
மனிதர்களால்
சிறு எறும்பும்
வேதனைப்படும்.

-----------------------------
சிறுகச் சிறுக அரித்துப்போகிறது
சுயநல செல்கள்
மனிதனுள் வளர்ந்த
மனிதநேயம்
முழுவதும் அரித்துவிட்டால்
நாளை மிஞ்சுவது
வெற்றுடல் மட்டுமே!

-----------------------------

- தே. ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு.

Friday, February 13, 2009

'துப்பட்டா'வின் துயரகீதம்!

சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா,
தன் சோகத்தை
வெளிப்படுத்துவதுபோல்
அமைந்த 'ஒப்பாரி' பாடல்.
----------------------------------------

துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுதுங்க........


மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......


கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......


மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....


கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுதுங்க.. எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுத்தா என்னாவும்?


கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலயறீக....-அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!


உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?


பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லேயம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்.....!


தாவணிய மறந்தீக
நம்ம தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!


முந்தானையும் தாவணியும்
முழுசா மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகளத்தான்
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!


பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்புக்கு நானிருக்கேன் - அத
எண்ணாம திரியுறீக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்...


கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!


===========================
- கிரிஜா மணாளன்

(Google "அன்புடன் குழும"த்தில் வெளியான
என் படைப்பு)

www.groups.google.com/group/anbudan

Wednesday, February 4, 2009

கவிஞர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

வணக்கம்.

எனது அலைபேசி 99940966667 தற்போது செயல்படாமலிருப்பதால், புதிய அலைபேசியின் எண்ணை இவ்வார இறுதிக்குள் அறிவிக்கிறேன். அதுவரை, இத்தளத்துக்குத் தங்கள் படைப்புகளை அனுப்பும் அன்பர்கள் அஞ்சலட்டையில் எழுதி, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

கிரிஜா மணாளன்
3, பாண்டியன் சாலை, ஆனந்தநகர்,
திருச்சி 620021.

உங்கள் ஆர்வத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி!

அன்புடன்....

- கிரிஜா மணாளன்

Tuesday, February 3, 2009

துளிப்பாக்கள்.

கண்ணீர்!
========

இதயத்திலிருந்து வழிந்தாலும்
நடிப்பென்றே ரசிக்கப்படும்
நடிகையின் கண்ணீர்.

------------------------
தளிர்கள்!
========

நேற்று வெட்டிய கிளைகளில்
இன்று மீண்டும்
புதிய தளிர்கள்!

- வடுவூர். சிவ. முரளி (9842846859)
புலிவலம். திருச்சி மாவட்டம்
தமிழ்நாடு

Sunday, January 18, 2009

"சிறந்த நூல்களுக்கான சிறப்புப் பரிசு" பெற்றுள்ள எங்கள் படைப்பாளர்களைப் பாராட்டுகிறோம்!

"திருச்சி மாவட்ட நலநிதிக் குழு" ஆண்டுதோறும், மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கி, கௌரவித்து வருகிறது.
அதன்படி, 2007, 2008 ஆண்டுகளுக்கான சிறந்த நூல்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 17.01.2009 அன்று திருச்சி மாநகரில் தமிழக அரசு சார்பில் நிகழ்ந்த "பொங்கல் கலைவிழா"வில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு அவர்கள் எழுத்தாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி. பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இவ்விழாவில் எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின், திருச்சி மாவட்டக் கிளையின் உறுப்பினர்களான கீழ்க்காணும் படைப்பாளர்கள் பரிசுகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறந்த சிறுகதை நூல்:

முதல் பரிசு: ரூ5000/- திரு. ஆங்கரை பைரவி சிறுகதை நூல்: "பின்னிருக்கையில் ஒரு போதி மரம்')

சிறந்த கவிதை நூல்:
இரண்டாம் பரிசு: ரூ. 3000/- திரு. கொட்டப்பட்டு சக்திவேலன் (கவிதை நூல்: "மனிதா! மனிதா!)

ஊக்கப் பரிசு: ரூ. 1000/- திருமதி. "ரத்திகா" (கவிதை நூல்: தேய்பிறையின் முதல் நாளிலிருந்து..)

சிறந்த சிற்றிதழ்:

இரண்டாம் பரிசு: திரு. த. சந்திரசேகரன் (ஆசிரியர் - "இனிய நந்தவனம்' மாத இதழ்)

------------------------------------------------------------------------------------
அனைவரையும் வாழ்த்துகிறோம்!


- கிரிஜா மணாளன்
செயலாளர் / திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.

மின்னஞ்சல்: girijamanaalanhumour.gmail.com

Wednesday, January 14, 2009

வலி?









குளத்தில் நீராட்டி
கொம்புக்கு வண்ணம் தீட்டி
அலங்கரிக்கும் முதலாளிக்குத்
தெரியுமா....
முரட்டுத்தனமாய் முன்பொரு நாள்
பிரம்பால் அடித்து
மாட்டின் முதுகில் ஏற்படுத்திய
காயத்தின் வலி
இன்னும் தொடர்வது?

- அ. ராஜீவ் காந்தி (9786098440)
செய்யார், தமிழ்நாடு.

Monday, January 12, 2009

பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!





அனைவருக்கும் எனது பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

- கிரிஜா மணாளன்
Editor

Sunday, January 11, 2009

பாவக்கணக்கு!



கோயில் வாசலில் கையேந்தி
யாசிக்கும் இரவலனைப் புறக்கணித்து
கோயில் உண்டியலில்
கொண்டுபோய்ச் சேர்த்தேன்
என் காணிக்கையை.
கடவுள் கண்சிமிட்டிச் சிரித்தபடி
வரவு வைத்துக்கொண்டார்
என் கணக்கில்
இன்னொரு பாவத்தை!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Thursday, January 8, 2009

கவிஞர் அ. ராஜிவ் காந்தியின் கவிதைகள்.



1. காரணமின்றி நிகழ்கிறது தொடர்கொலைகள்
என் காலுக்கடியில் சிக்கும்
எறும்புகளாய்.


2. எந்த போகியிலும் கொளுத்தப்படுவதேயில்லை
மனிதர் மனதில் குவிந்து கிடக்கும்
குப்பைகள்.



கவிஞர் அ.ராஜிவ் காந்தி அவர்களின், "முதுமை" என்ற இக்கவிதை "அன்புடன் குழுமம்" (கூகுள் இணையதளம்) பார்வைக்கு வைக்கப்பட்டு, அக்குழும நண்பர்கள் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


- கிரிஜா மணாளன்