Saturday, February 28, 2009

"மனிதநேயம்" - கவிதைகள்: தே.ரம்யா

சாலையில் எதிரே ஒருவன்
இரத்தவெள்ளத்தில் துடிக்கும்போது
கண்களை மூடிக்கொண்டு
சுயநலமாய்ப் பயணம் தொடரும்
மனிதர்களிடையே
மரித்துப்போனது
'மனிதநேயம்'!.

---------------------------
போதை வஸ்துவை
உடலில் புகுத்தி
பெண்களின் கற்பை
கரன்ஸியில் பறிக்கும்
கயவர்களிடம்
கசங்கியே காயப்பட்டுக்
காணாமற்போனது
"மனிதநேயம்'!

---------------------------
தன் இனத்தைத்
தானே அழிக்கும் அவலம்,
நேயம் மறந்த நரகர்களால்,
வெடித்த தீவிரவாதத்தால்
சிதறியேபோனது
"மனிதநேயம்"!

---------------------------------
தின்று துப்பிய கரும்புகூட
எறும்புக்கு சிறு பசியாற்றும்
மாளிகையில் வாழ்ந்தாலும்
மனிதநேயம் மறந்த
மனிதர்களால்
சிறு எறும்பும்
வேதனைப்படும்.

-----------------------------
சிறுகச் சிறுக அரித்துப்போகிறது
சுயநல செல்கள்
மனிதனுள் வளர்ந்த
மனிதநேயம்
முழுவதும் அரித்துவிட்டால்
நாளை மிஞ்சுவது
வெற்றுடல் மட்டுமே!

-----------------------------

- தே. ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு.

1 comment:

Anonymous said...

அற்புதமான ஓர் அக்னி வார்த்தைகளில்
மனித நேயத்தை
மனித நேயமுடன்
சொல்லியது..

வாழ்த்துக்கள்..

அன்புடன் இளங்கோவன்